Friday, 13 April 2018

நீரின் கண்கள்



நீரின் கண்கள் 



தண்ணீருக்குக் கண்கள் இருப்பது 
உங்களுக்குத் தெரியுமா ? 

அசைவற்று இருந்த தொட்டித் தண்ணீரில் 
ஒரு சிறு கல்லைப் போட
நீர் ஒரு கண்ணைத் திறந்து மூடியது 

ஒவ்வொரு கல்லாய் எறிய 
நீர் தன் கண்களைத் திறந்து திறந்து மூடியது

புத்தனை விழுங்கிய புழு


 புத்தனை விழுங்கிய புழு ... 

தன் நிழலிலேயே 
இளைப்பாறும் பறவை ஒன்றின்
பறத்தலின் வேகத்தை
கற்பனை செய்பவன்  


வருத்தங்களை எடைக்குப் போட்டால் 
யார் வாங்குவார் என
புலம்பித் திரிந்து

தற்கொலை நொடிகளை 
எடை  கற்களாய் வைத்து
பிடித்தமான சொற்களை
தராசில் வைக்கிறான் 

தராசு இயல்பு இழந்து 
சுழித்து ஓடும் நதியில் விழுகிறது

விழுங்கிய மீனொன்று 
நீருக்குள் மூழ்கும் தன்மை இழந்து மிதக்கிறது

காற்று உள்ளே அமிழ்த்த முயன்று தோற்று
எடை கற்களை தராசை
சிக்கெடுக்கிறது 

மீன்கொத்தி அதைக் கொத்தி
பறக்கும் திறன் சரிந்து வீழ்கிறது

வேடனுக்கு அம்பு மிச்சம்
அனலில் வாட்டிய பிறகு 
எல்லா பசியற்றும் போகிறான்

பசியற்ற உடல் எடையற்று
தூக்கில் தொங்கும் போது
மரத்தின் இலைகளில் ஒன்று அதிகம்

புத்தனை விழுங்கிய புழு
தியானம் கடந்து உறங்குகிறது
இன்னொரு உடலின் கனவில்.



Thursday, 12 April 2018

லிட்டுவின் நூல்கண்டு - 3


     லிட்டுவின் நூல்கண்டு - 3


     கண்ணை மூடி திறப்பதற்குள் நூல் கண்டு ஆஸ்திரேலியாவின் ஒரு சமவெளியில் உருண்டது . பழங்குடியினரின் எல்லா அடையாளங்களும் அழிவுக்கு உள்ளாகி வரும் இச்சூழலில் அவர்கள் பயன்படுத்திய சொல்தான் கங்காரு என்று நாம் அழைக்கும் அந்த விலங்குக்கு பெயராகி இருப்பது வியப்புதான் .



    கங்காருகள் தாவி குதிப்பதில் மற்ற எந்த விலங்கைக் காட்டிலும் சிறப்பாக செயல்படும் . ஒரு பெரிய  கங்காரு  நூல்கண்டின் ஆரஞ்சு நிறத்தில் மயங்கி அதை ஆர்வமாக எடுத்தபடி தாவ நூல் கண்டு நீர் நிறைந்த குளத்தில் விழுந்தது. 

     லிட்டுவின் திகைப்பைப் பார்த்த கங்காரு அவனிடம் வந்தது. அதன் அமைதி ஏதோ கேட்பது போல இருந்தது. 



    "நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் . அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டை தான் நீ தாவும் போது குளத்தில் தள்ளி விட்டாய் அது திரும்ப கிடைத்தால் என் பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் " என்று பெருமூச்சு விட்டபடி லிட்டு கேட்டான் . 


      கங்காரு தன் குட்டிகளை சுமக்கும் அடி வயிற்றின் பையில் இருந்து சிவப்பு நிற நூல் கண்டைத் தந்தது சிட்னியின் கடற்கரை சாயும் அந்தியில் விளக்குகளால் ஒளிரத் தொடங்கியது அதை இரசித்தபடியே நூல் கண்டை உருட்டி விட்டான் சிவப்பு நூல் கண்டின் வேகம் ஒலியின் வேகத்தை விட மிக அதிகமாக இருந்தது . நூல் கண்டு கடைசியாக நின்ற இடத்தை அடைந்த போது லிட்டு மிகவும் களைத்துப் போய் இருந்தான் . என்ன அதிசயம்  அது மெக்கலன் தாத்தா காலடியில் வந்து நின்றது . 


    மெக்கலன் தாத்தா சிவப்பு நிற நூல்கண்டைக் கையில் எடுத்தபடி 

" லிட்டு " என்று கூப்பிட்டார். 

   "தாத்தா நீங்க எப்படி இங்க வந்தீங்க?  ஏதாவது மாயம் செஞ்சீங்களா?" என்று வியப்போடு கேட்டான் லிட்டு. 


  சிரித்தபடி தன் தாடியை ஒரு கையில் தடவியபடி மெக்கலன் தாத்தா கேட்டார் ,

" பூமியின் வடிவம் என்ன? "

" ஆரஞ்சு பழம் போன்ற கோள வடிவம்" என்று பதில் சொன்னான் லிட்டு. 


   "கோள வடிவம் உள்ள எந்தப் பொருளுக்கும் ஆதியும் இல்லை அந்தமும் இல்லை அதன் மேலே அமையும் எல்லா புள்ளியுமே மையம் தான் " 

  " அதனால் நீ நிற்கும் உன் காலடியில் தான்  உலகின் ஆதியும் அந்தமும் உள்ளது" என்றார் .

"அப்படியா இதை முதலிலே செல்லி இருக்கலாமே தாத்தா  "

"நான் எப்படி உலகத்தைச் சுற்றி வந்தேன் என உனக்குத் தெரிய வேண்டாமா ? அதான் உனக்கு முதலிலேயே சொல்லவில்லை" என்றார். 

  லிட்டுவுக்கு ரொம்ப மகிழ்ச்சி தனது கேள்விக்கு விடை கிடைத்தற்கு  . அந்த அதிசய நூல்கண்டு இல்லை எனில் தன்னால் உலகத்தை இவ்வளவு எளிதாகச் சுற்றி இருக்க முடியாது என்று மகிழ்ச்சி அடைந்தான் . 

   " உலகத்தைச் சுற்றிய அதிசய சிறுவன் லிட்டு "  என,  தாத்தா சொன்னதும் லிட்டுவின் மகிழ்ச்சி வானை முட்டியது. லிட்டு ஒவ்வொரு காலடியையும் பூமியின் ஆதியிலும் அந்தத் திலும் வைத்தபடி வீடிற்கு ஓடினான். 



  


லிட்டுவின் நூல்கண்டு - 2




      லிட்டு முன்பு போலவே நூல் கண்டின் நுனியைப் பிடித்தபடி உருட்டினான். அது வேகமாக ஓடியது. பிரிந்து உருண்டு ஓடும்அதன் வேகத்தில் நூல் கண்டே தீர்ந்துவிடும் போல இருந்தது . 

     லிட்டுவுக்கு குளிர் அதிகமாகத் தெரிந்ததால் நூல்கண்டைப் பின் தொடர்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது இப்போது நூல் கண்டு ஐரோப்பாவில் இருந்த ஒரு பெரிய பண்ணையின் உள்ளே உருண்டு ஓடியது . 


     அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு நூல்கண்டை பச்சை புல் என நினைத்து சேர்த்து மேய்ந்து கடித்துத் துப்பியது .


    "நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் . அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டை புல் என நினைத்து நீ கடித்துத் துப்பிவிட்டாய் " என்று கூறிய விட்டு துள்ளி வந்த பசு கன்றை மெல்ல தடவிக் கொடுத்தான் . 


   தொழுவத்தின் உள்ளே சென்ற மாடு மஞ்சள் நிற நூல் கண்டைக் எடுத்து வந்து கொடுத்தது . 


    லிட்டு இம்முறை சிந்தனை ஏதும் இன்றி நூலின் நுனியைப் பிடித்துக் கொண்டு உருட்டினான் அதன் வேகம் மிக அதிகமாக இருந்தது . வட அமெரிக்காவில் ஒரு வினோதமான விலங்கின் அருகில் சென்றது . 


   இதற்கு முன் லிட்டு அதை நேரில் பார்த்ததில்லை அதை பீவர் என்று அழைப்பார்கள் தமிழில் நீர் நாய் என்று சொல்வார்கள் அதன் உரோமம் விலை மதிப்பு மிக்க தாம் . அதன் இரண்டு முன்  பற்கள் முன்புறம் நன்கு நீண்டு இருந்தன சிறிது நேரத்திலேயே சிறு கூட்டமாக அவை சேர்ந்து விட்டன . 


   ஒரு குட்டி பீவர் நூல்கண்டை பிரித்து இழுத்து வளைக்குள்  இழுத்துச் சென்றது 


  " ஏய் ... . ஏய்..... குட்டி பீவர் என் நூல் கண்டை துண்டாக்கி விடாதே , நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் . அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டை  எதுவும் செய்து விடாதே" என்று லிட்டு சொன்னான் . ஆனால் அவன் சொல்லி முடிப்பதற்கு முன்னே குட்டி பீவர்கள் நூல்கண்டைக் கடித்து துண்டாக்கி விட்டன . 


  லிட்டுவின் குரலால் , பீவர்கள் எல்லாமே முன்னங்கால்களை இரு கைகளைப் போல உயர்த்தி நிமிர்ந்து பார்த்தன. 


  ஒரு உயரமான பீவர் , அதுதான் எல்லா பீவர்களுக்கும் தலைவனாக இருக்க வேண்டும் அது  ஒரு பாறையின் பின்னால் இருந்து ஆரஞ்சு நிற நூல் கண்டை எடுத்து வந்து தந்தது . முன்பு போல லிட்டு நூல் கண்டை உருட்டினான் அது காற்றைக் கிழித்துக் கொண்டு  ஓடியது பின் தொடர்ந்த லிட்டுவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது . 
தொடர்ச்சி... link இல்

https://poovithalumesh.blogspot.in/2018/04/3.html?m=1
    
     

லிட்டுவின் நூல் கண்டு - 1


    லிட்டுவின் நூல் கண்டு - 1
 

      உலகம் எந்த இடத்தில் தொடங்குகிறது ? எங்கே முடிகிறது? ,,, என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தான் லிட்டு .


    யாரிடம் கேட்டால் விடை கிடைக்கும் என்று சிந்தித்தபடியே நடந்தான் . எதிரே மெக்கலன் தாத்தா நடந்து வந்தார் . அவரு தான் இந்த உலகத்தையே முதன் முதலில் சுற்றி வந்ததா எல்லோரும் பேசிக்கிறாங்க. 


  அவரிடம் , 
   "தாத்தா இந்த உலகம் எந்த இடத்தில் தொடங்குது ? எங்கே முடியுது? என கேட்டான் .

  "இதோ இந்த நூல் கண்டை  வச்சுக்கோ இது அதிசய நூல்கண்டு ,உருட்டி விடு,  இது எங்கு முடிகிறதோ அந்த இடத்தில் உலகம் முடிந்துவிடும் ,முடிகிற இடத்தின் எதிர் திசையில் உலகம் தொடங்கிவிடும்". 
   
    - என்று கூறியபடி வேப்ப மரத்தின் அடியில் அமர்ந்தார் மெக்கலன் தாத்தா.

  லிட்டு , நுனியைப் பிடித்துக் கொண்டு ஊதா நிறத்தில் இருந்த நூல் கண்டை உருட்டி விட்டான், அது வேகமாக உருண்டு ஓடியது . அவன் முயல் குட்டியைப் போல அதன் பின்னால் குதித்து ஓடினான்  .அது இறுதியில்  ஒரு வறண்ட நிலப்பகுதியில் உருண்டு சென்று ஓர் எலியின் வளையில் விழுந்து  உள்ளே சென்றது. 


   "உள்ளே யாரு  இருக்கீங்க உங்க வளைக்குள்ளே என் நூல்கண்டு விழுந்துருச்சி " என்று கூப்பிட்டான் லிட்டு . 

  உள்ளே இருந்து ஒரு பெரிய எலி வந்தது. கழுத்துப் பகுதியில் வயிற்றுப் பகுதியில்  வெள்ளை நிறமுடைய ஓர் ஆசிய எலி இனம் அது. 


  "நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிட்டுப் போகிறேன் அதைக் கண்டு பிடிக்க உதவும் அதிசய நூல் கண்டு உன் வளையில் விழுந்துவிட்டது எடுத்துத் தர வேண்டும்"  என்று அன்பாகக் கேட்டான் விட்டு  . 

    
    "தவறுக்காக வருந்துகிறேன் என்னுடைய எலிக் குஞ்சுகள் நூல் கண்டைக் கடித்து விளையாடிவிட்டன , அதைப் போலவே வேறு ஒரு நூல் கண்டு தருகிறேன்" என்று கூறி உள்ளே சென்றது எலி .  சிறிது நேரம் கழித்து வெளியே வந்து  கருநீல நிற நூல் கண்டைத் தந்தது . 

   நூல் கண்டை வாங்கிய லிட்டு சிறிது யோசனைக்குப் பின் , மீண்டும் உருட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என அதன் நுனியைக் கையில் வைத்துக் கொண்டு உருட்டி விட்டான். அது வேகமாக உருண்டு ஓடியது. 

     உருண்டு உருண்டு ஓடிய நூல்கண்டு இறுதியில் ஒரு புலியின் குகையின் உள்ளே சென்று விட்டது . அது தென் அமெரிக்காவின் பொலிவியா காடு .


    "உள்ளே யாரு இருக்கீங்க கொஞ்சம் வெளியே வாங்க" , என்று உரத்துக் கூப்பிட்டான் லிட்டு

   ஒரு புலி வெளியே வந்தது .அதன் கம்பீரம் லிட்டுவுக்கு கொஞ்சம் பயத்தைத் தந்தது. ஆனாலும் உலகின் ஆதியும் அந்தமும் தேடும் அவன் இலக்கு மட்டுமே அவனுக்குப் பெரியதாகத் தெரிந்தது. எனவே வந்த காரணத்தைச் சொன்னான் . 


  " நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டு உங்கள் குகையின் உள்ளே வந்து விட்டது அதை எடுத்துத் தந்தால் எனக்கு பெரும் உதவியாக இருக்கும்" . 


    புலி உள்ளே சென்று திரும்பும்  போது வெறுங்கையுடன் வந்தது .


  "எங்கே என் நூல் கண்டு " ? என ஆர்வமாக கேட்டான் லிட்டு. 


   புலி கொஞ்ச நேரம் அமைதியாக நின்றது . அதன் புலிப் பறழ் (புலிக்குட்டி) நூல் கண்டை வாயில் கடித்தபடி வெளியே வந்தது . அதுதான் தான் பின் தொடர்ந்த நூல் கண்டு என தெரிந்து கொண்டான் . 

     உள்ளே இன்னும் புலிகளும் புலிப்பறழ்களும் (புலிக்குட்டிகளும்) இருப்பது தெரிந்தது . 


   லிட்டுவை நீண்ட நேரம் பதில் சொல்லி காக்க வைக்க விரும்பாத புலி உள்ளே சென்று நீல நிற (BLUE) நூல்கண்டைக் கொண்டு வந்து கொடுத்தது . 


    லிட்டு சிறிது நேரம் கூட தாமதிக்காமல் நூலின் நுனியைப் பிடித்துக் கொண்டு உருட்டினான் . அதன் வேகம் முன்பை விட மிக அதிகமாக இருந்தது . 


    இப்போது நூல் கண்டு ஆப்பிரிக்க காடுகளின் வழியே  உருண்டு சென்றது இவனுடைய வேகம் அதிகமாக மாறியது. காடு முழுவதும் எவ்வளவு விலங்குகள் வரிக்குதிரைகள் எருமைகள் மான்கள் புலி, சிங்கம்  இன்னும் பல சிறிய விலங்குகள் என பல ஆயிரம் திரிந்தன . 


   நூல்கண்டு ஏதேனும் எளியே விலங்குகளின் அருகே செல்லாமல் அங்கு நின்ற  ஒரு யானையின்  கால்களுக்கு இடையில் சுற்றிக் கொண்டது. அங்கு யானை தன் கன்றோடு (குட்டி)  உலவியபடி இருந்தது. 



  யானைகள் தனித்து இருக்கும் போது உண்டாகும் அச்சத்தை விட அவை தான் குட்டிகளுடன் இருக்கும் போது தான் அதிகம் ஏனெனில் அத்ததைய சூழல்களில் யானைகள் அதிக மூர்க்கமாக தாக்கும் . 



   லிட்டு கொஞ்ச நேரம் பொறுமையாக நின்று அவற்றின் செயல்களை கவனித்தான் . பிறகு அச்சமின்றி 


    "நான் உலகத்தின் ஆதியும் அந்தமும் தேடிக் கொண்டு போகிறேன் அதனைக் கண்டு பிடிக்க உதவும் நூல் கண்டு உன் கால்களில் மாட்டிக் கொண்டு உள்ளது . அதனை எடுத்துத் தந்தால் என் பயணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் "  .என்று கேட்டான் . 


   புதியதாய் ஒரு குரலைக் கேட்ட  பெரிய யானை சற்று தடுமாறியது அதனால் நூல் கண்டு கால்களில் மாட்டிக் கொண்டது. 


      லிட்டுவுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் திகைத்த யானை ஒரு மூங்கில் மரத்திலிருந்து  பச்சை நிற ( GREEN)   நூல்கண்டை எடுத்துக் கொடுத்தது 

                   தொடரும்......... அடுத்தப் பகுதி

https://poovithalumesh.blogspot.in/2018/04/2.html?m=1

Friday, 6 April 2018

கவிதை

புராஜக்ட்

வெள்ளைத் காகிதத்தை 
பகல் என்று சொல்லி மடித்து வைத்தாள்
அதன் மீது 
அவள் பாதி சப்பிய ஆரஞ்சு மிட்டாயை
சூரியன் என ஒட்டி வைத்தாள்

கருப்பு காகித்த்தை 
இரவு என்று விரித்து வைத்தாள் 
அதன் மீது 
அறுந்து விழுந்த 
அப்பாவின் சட்டை பட்டனை 
நிலா என்று ஒட்டி வைத்தாள் 
புராஜெக்ட் தயார் 

இன்று திங்கட்கிழமை
அவள் உருவாக்கிய 
பகலும் இருக்கிறது இரவும் இருக்கிறது
அவற்றை பார்த்தபடி 
மாடத்தில் விளக்கு எரிகிறது. 









குழந்தை இலக்கியம்


         காணாமல் போன புழு 

     

      காட்டில் பறவைகள் விலங்குகள் உட்பட  எல்லோரும் மகிழ்ச்சியாக விளையாடியபடி இருந்தனர் ஆனால் ஒரு புழு மட்டும் யாரோடும் பேசாமல் விளையாடாமல் இலையைத் தின்று கொண்டே இருந்தது . அங்கும் இங்கும் மரத்தின் கிளைகளில் தாவிய படியே இருந்த அணில் இதைக் கவனித்தது .

 "புழுவே ஏன் எப்போதும் இலையைத் தின்றபடியே இருக்கிறாய் ?  எங்களோடு  வந்து விளையாடு" என்று அழைத்தது. 

  பதில் எதுவும் சொல்லாமல் புழு இலையைத் தின்றபடியே இருந்தது. மரத்தில் பழங்களைக் கொத்தி தின்று கொண்டு இருந்த கிளி இந்த உரையாடலைக் கேட்டு கீழே பறந்து வந்து , 

" புழுவே ஏன் எங்களோடு விளையாட வராமல் எப்போதும் இலையைத் தின்று கொண்டே இருக்கிறாய் ?  நீ இப்படியே தின்று கொண்டே இருந்தால் உடல் பெருத்து விடுவாய் , வா விளையாடலாம் "
– என்று கிளி கூப்பிட்டது அதற்கும் புழு எந்த பதிலையும் சொல்லாமல்  இலையைத் தின்றபடியே இருந்தது . 

  புழு யாரோடும் விளையாடாமல் பேசாமல் இருப்பது அருகில் இருந்த எல்லா பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தெரிந்துவிட்டது . இதனால் அங்கு விளையாடிய எல்லோருமே புழுவைப் பற்றியே பேசினர் . 

  இதைக் கேள்விப்பட்ட மயில் , 

" என் அழகிய தோகையைப் பார்த்து வியந்து பேசாதவர்களே இல்லை ,  நான் போய் புழுவிடம் பேசுகிறேன்" என்றது . புழுவின் அருகில் வந்து தோகை விரித்து ஆடி பேசியது.  மயிலின் பேச்சை சிறிதும் சட்டை செய்யாமல் , புழு எப்போதும் போல தின்றது. மயில் ஏமாற்றம் அடைந்து சென்றது.

  கலைமான் , 
  மயிலின் சோர்ந்த முகத்தைப் பார்த்தது .  என்ன காரணம் என கேட்டறிந்தது.   பிறகு அழகிய வெள்ளைப் புள்ளிகளை உடைய அது புழுவிடம் சென்றது.

 "என்னுடைய அழகிய  கொம்புகளைப் பார் , இதன் மீது ஏறி விளையாடுவதற்கு வா , உலகில் யாருக்குமே கிடைக்காத அதிஷ்டம் உனக்கு இருக்கு" என்று கூறியது . புழு அமைதியாக தின்றது. 

 "இந்தப் புழுவுக்கு ரொம்பத் திமிறு யார் என்ன பேசினாலும் கல்லுளி மங்கனைப் போலவே இருக்கு"  

– என புழுவைப் பற்றி தன் அருகில் உலவிய கரடியிடம் கூறியது மான் 

     "ஓ அப்படியா" என வியந்த கரடி ,

 "நானும் அந்தப் புழுவைப் பார்க்கணும்,  தேனின் சுவைக்கு மயங்காதவர் உலகில் யார் ?  நான் பேச வைக்கிறேன்" 

– என மனதுக்குள்ளே சொல்லி , மிகச் சுவையான தேனை கையில் ஏந்தியபடி புழுவிடம் வந்தது . 

" அழகிய பச்சை நிற புழுவே என்னைக் கொஞ்சம் பார் - 
நான் கைகளில் ஏந்தி இருக்கும் அதி சுவையான தேனைப் பார் - சுவையற்ற இலையை விட்டு விட்டு வா " 
– என ஏதோ கவிதை சொல்வது போல  பேசியது கரடி,  புழு அதை ஏரெடுத்தும் பார்க்கவில்லை அதனால் கோபம் அடைந்து, 
"உன்னை என்ன செய்யப் போகிறேன் பார் " 
– என அங்கிருந்து புறப்பட்டது . 

கோபமாக வரும் கரடியிடம் கோபத்திற்கான காரணத்தைக் கேட்டது முயல் . கரடி நடந்ததைக் கூறியது

  இந்த வினோத செயலைக்  கேள்வி பட்ட முயல் தானும் புழுவைப் போல தின்றபடியே இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையோடு புறப்பட்டது . 


"என்ன சாப்பிடுவது ? கேரட் சாப்பிடலாமா ? முள்ளங்கி சாப்பிடலாமா? என்று சிந்தித்தது. முள்ளங்கி காரமாக இருக்கும் நாள் முழுவதும் சாப்பிட முடியாது  எனவே கேரட்டைதான் சாப்பிடனும் , அதுதான்  கொஞ்சமாவது இனிப்பாக இருக்கும் என நினைத்தது. 

   முயல் உடனடியாக ஒரு கேரட் தோட்டத்துக்குச் சென்றது. அழகிய ஆரஞ்சு நிற கேரட்டுகளை பறித்து  சாப்பிடத் தொடங்கியது. முதலில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது ஆனால் கொஞ்சம் நேரமாக நேரமாக வயிறு வலிக்க ஆரம்பித்தது . முயலுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை . காட்டில் இருக்கும் ஒரே மருத்துவர் கீரி தான் .  விசமுடைய நகப்  பாம்பைக் கடித்தாலும் ஏதேனும் ஒரு மூலிகையைச் சாப்பிட்டு வாழும்  கீரியிடம் முயல் சென்றது. நடந்ததைக் கூறியது. 

   "முயலே , நீ குதித்து குதித்து ஓடினால் விரைவாக சீரனம் ஆகி  உன்னுடைய வயிற்று வலி போய்விடும் " என்றது கீரி. 

    முயல் குதித்துக் குதித்து ஓடியது. தலைகீழாக பல்டி அடித்தது . வலி குறைந்தது மாதிரி தெரியவில்லை. உடலெங்கும் மண்ணைப் பூசியது தான் மிச்சம், முயலின் இந்த விசித்திரமான செயலைப் பார்த்த யானை , முயலைக் கூப்பிட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? உனக்கு என்ன ஆச்சு? எனக் கேட்டது. முயல் தனக்கு வயிற்று வலி வந்த வரலாறைக் கூறியது. யானை குலுங்கி குலுங்கி சிரித்தது ஆனாலும் அந்தப் புழுவைப் பற்றிக் கேட்டதும் அதைப் பார்க்க ஆர்வமாகி உடனே  புறப்பட்டது. 

      யானை புழு இருக்கும் இடத்திற்குச் சென்ற போது அங்கு ஒரு பெரும் கூட்டமே கூடி இருந்தது. யானை வருவதைப் பார்த்து எல்லோரும் ஒதுங்கி வழிவிட்டனர். 

    "இந்தப் புழுவுக்கு காது கேட்காது அதனால் தான் நாம் என்ன பேசினாலும் அதற்கு கேட்கல" என்று ஒரு சிட்டுக்குருவி கூறியது , இதனால் யானை கொஞ்ச நேரம் அமைதியாக நின்றது. தன் முறம் போன்ற பெரிய காதுகளை அசைத்தது'   எல்லா காட்டு உயிர்களுமே அங்கு கூடி விட்டன.

   திடீரென காட்டில் இருந்த விலங்குகள் பறவைகள் எல்லாம் காணாமல் போனதைக் கண்ட சிங்கம் என்ன நடந்திருக்கும் என்று சுற்று முற்றும் பார்த்தது. சற்றுத் தொலைவில் ஒரு புலி வருவதைப் பார்த்தது . வரட்டும் அதனிடம் கேட்கலாம் என இருந்தது . புலி அருகில் வரும் போது அங்கு ஒரு எலியும் வந்து சேர்ந்தது. 

   வேடன் விரித்த வலையைக் கடித்து  சிங்கத்தைக் காப்பாற்றியதில் இருந்து எலி சிங்கத்திடம் பயமின்றி வருவதும் பேசுவதுமாக இருந்தது. எலி ஏதோ பரபரப்பான செய்தியைச் சொல்ல வருவதை அறிந்த சிங்கம் கேட்பதற்கு ஆவலாக இருந்தது. 

    புழுவைப் பற்றியும்   காட்டில் உள்ள எல்லாரும் எங்கு உள்ளனர் என்பது பற்றியும் முயலின் வயிற்று வலி பற்றியும் விரிவாக எலி கூறியது. 
   சிங்கத்திற்கும் புலிக்கும் இந்த செய்திகளைக் கேட்டதும் ஆர்வம் தாங்க வில்லை . புழு இருக்கும் இடத்திற்கு புறப்பட்டன . 

   சிங்கமும் புலியும் வருவதைப் பார்த்த எல்லோரும் அமைதியாக இருந்தனர் . "எங்கே அந்தப் புழு " என்று சிங்கம் முன்னாடி செல்ல புலி பின்னே சென்றது. ஆனால் புழு அங்கு இல்லை மாயமாக மறைந்துவிட்டது. அணில் , மரங்கொத்தி , தேன்சிட்டு ஆகியவை மரம் முழுவதும் தேடின. எங்குமே புழு காணவில்லை . 
"புழு எங்கே போனது? நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பார்த்தேனே" என்றது யானை . 
   எங்கு தேடியும் புழு கிடைக்காததால் காடே பரபரப்பானது. அங்கு ஒரு இலையின் அடியில் கூம்பு போன்று கொஞ்சம் உருண்டையாக நூலால் ஒன்று இருந்தது இதைக் கவனித்த நரி " புழு , புலியிடம் தப்பிக்க ஏதோ திட்டம் தீட்டி இருக்கு"  என்றது. எப்படியும் இலையைத் தின்ன புழு வெளியே வரும் என்று எல்லோரும் காத்திருந்தனர். ஆனால் அந்தக் கூம்பு வடிவ கூட்டில் துளையிட்டு  திடீரென ஒரு அழகிய பட்டாம்பூச்சி பறந்து சென்றது. 


    ஏமாற்றம் அடைந்த சிங்கம் இனிமேல் காட்டில் இது போல் எதற்கும் கூட்டம் போடக்கூடாது . அவரவர் வேலையைப் பார்க்கவும் என்று எச்சரித்தது . எல்லாம் அமைதியாகக் கலைந்து சென்றன. அந்த நிகழ்வுக்குப் பிறகு காட்டில் இன்று வரை விலங்குகள் பறவைகள் ஒன்று கூடவே இல்லை. 

    "புழு எங்கே போனது ? யாருக்காவது தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க" .
    
- பூவிதழ் உமேஷ் 



Thursday, 5 April 2018

குழந்தை இலக்கியம்

      யார் பலசாலி


      வயதான பெரியவர் ஒருவர் மொரப்பூரில் வாழ்ந்து வந்தார் அவருக்கு வயது நூறு. அவரிடம் பெரியதாக சொத்து ஏதுமில்லை ஒரு மாடு மட்டும் இருந்தது . அதற்கு தேவையான தீனியை கொஞ்ச நேரத்திலேயே சேகரித்து விட்டு வேறு ஏதேனும் வேலை செய்ய சென்று விடுவார் . அவருடைய இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை செய்து வந்தனர் . 



    ஒரு நாள் திடீரென உடல் நலம் குன்றி இறந்து போனார் . பிறகு மகன்களால் மாட்டுக்குப் புல்லு பொடி சேகரித்துப் பராமரிக்க இயலவில்லை  எனவே, மாட்டைப்  பக்கத்து ஊர் சந்தையில் விற்று விடுவது என முடிவு செய்து விற்பதற்காக ஓட்டிச் சென்றனர் .



    இருவரும் முன் பின் ஒருவராக மாட்டை ஓட்டிச் சென்றனர் . வழியில் எதிரே ஒரு வயதான பெரியவர் வந்தார். முன்னால் சென்றவனிடம்  எங்கே போறீங்க என்று விசாரித்தார் அவன் , நாங்க கம்பைநல்லூர் வெள்ளிச் சந்தையில் மாட்டை விற்க போகிறோம் என்று சொன்னான். 


   "இவ்வளவு மெதுவாகப் போனால் நேரத்துல சந்தைக்குப் போக முடியாது" என்று பெரியவர் சொன்னார் . 


   " அதை என்னிடம் மட்டும் சொன்னால் போதாது, மாட்டைப் பின்னால் ஓட்டி வரும் என் தம்பியிடம் சொல்லுங்க " என்றான் 


    பெரியவர் மாட்டைப் பின்னால் ஓட்டி வருபவனிடம் சொல்வதற்காக வேகமாக நடந்து வந்தார் ரொம்ப நேரமாகியும் வந்து, சேரவில்லை மாட்டின் வயிறு பகுதிக்கு வந்த போது " எவ்வளவு பெரிய மாடு " என்று வியந்து போனார் . 


    அவர் செல்லமாக கழுகு ஒன்றை வளர்த்து வந்தார் .  அதை எப்போதும் தன் சட்டைப்பையிலே வைத்திருப்பார் . கழுகுக்குப்  பசிக்கும் போது இரை தேட பறக்க விடுவார் . அன்றும் ஏதேனும்  இரை தேடட்டும் என்று கழுகை வெளியே பறக்க விட்டார் . 


   கழுகு மாட்டைத் தூக்கிக் கொண்டு பறந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அருகில் இருந்த காட்டில் ஒரு மரத்தின் மீது அமர்ந்து மாட்டைக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது .


    திடீரென வானம் கறுத்து மழைப் பெய்யத் தொடங்கியது , காட்டில் மேய்ந்து கொண்டிருந்த கொழுத்து வளர்ந்த செம்மறி ஆடு ஒன்று மழைக்காக அந்த மரத்தடியில் ஒதுங்கியது . அதே போல மழைக் குளிரைத் தாங்கமுடியாத நரி ஒன்றும் மரத்தடிக்கு வந்து ஆட்டின் தாடியின் கீழே நின்று கொண்டது . 


    வெகு நேரமாகியும் மழை நிற்பதாகத் தெரியவில்லை.  வானம் வெளி வாங்கத் தொடங்கும் முன் சிறு சிறு தூறல்களைப் போட்டது. மழை ஓய்ந்து விட்டதா என நரி அன்னாந்து பார்த்தது அதன் மூச்சுக்காற்றில் மிரண்டு போன ஆடு ஏதோ புயல் காற்று வந்து விட்டதாக மிரண்டு, உடலைக் குலுக்கி ஓடியது , அதனால் மரம் அதிர்ந்து குலுங்கி சாய்ந்தது . 



    ஏதோ ஆபத்து நேர்வதாய் நினைத்த கழுகு அங்கிருந்து பறந்து விட்டது . மாதங்கள் உருண்டு ஓடின . மாட்டின் தோலின் மீது ஒரு புதிய நகரமே ஒரு பக்கம் உருவாகி விட்டது . 



    திருமணம் முடிந்து பல ஆண்டுகளாய் குழந்தை இல்லாத அரசனுக்கு நேற்று தான் குழந்தை பிறந்தது . தன் மனைவிக்கு வேட்டையாடி ஏதேனும் பரிசாக வழங்க காட்டுக்கு வேட்டையாட வந்தான் அரசன்  பொழுது சாயும் வரை எதுவும் கிடைக்கவில்லை . வெறுங்கையோடு தான் இன்று போக வேண்டுமே என கவலைப்பட்டான் , இறுதியில் அவன் காலுக்கு கீழே ஏதோ  தட்டுப்பட்டது அது ஒரு மாட்டுத் தோலின் வால் என்று தெரிந்தது . 


   அரசன் சிறிதும் தாமதிக்கவில்லை தன் மனைவிக்குப் பரிசாக இந்த மாட்டுத் தோலையாவது கொண்டு போய்க்  கொடுக்கலாம் என , அதை ஒரே கையால் இழுத்தான் அதன் மீதிருந்த நகரமே சரிந்து விழுந்தது.  வேகமாக மாட்டுத் தோலோடு சென்று தன் மனைவியிடம் தந்தான் .  அதை வாங்கிய அரசி சில நொடிகளிலேயே அதில் குழந்தைக்கு ஓர் அழகிய தொப்பியை செய்து முடித்தாள் . நேற்று பிறந்த குழந்தை அதை எடுத்து தலையில் அணிந்து கொண்டது . 



    இக்கதையில் யார் பலசாலி ? 

-இறந்த பெரியவரா?

-மாட்டை ஓட்டிச் சென்றவர்களா?

-விரைந்து போகச் சொன்ன வழிப்போக்கரா?

- மாட்டைத் தூக்கிப் பறந்த பருந்தா?

- பருந்தையும் கழுகையும் சுமந்த மரமா? 

- தன் சிலிர்ப்பால் மரத்தையே சாய்த்த ஆடா?

_ தன் மூச்சல் ஆட்டையே நடுங்க வைத்த நரியா?

- ஒரே கையால் மாட்டுத் தோலை இழுத்த அரசனா ?

_  சில நொடிகளிலே தோலில் தொப்பி செய்த அரசியா ?

- அந்த தொப்பியை அணிந்த பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையா? 

Monday, 2 April 2018

கவிதை


இரவை பொம்மையாக மாற்றல்

கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள்
பகலில் இருந்தபடியே 
இரவை உருவாக்குகிறார்கள்
நீரிலிருந்தபடியே நெருப்பை உருவாக்குவது போல

சில நேரங்களில் 
நைந்த கைக்குட்டை கிழிசல்கள்
விண்மீன்களை உருவாக்கும் 

இரவின் நீளம் 
ஓர் எண்ணில் முடியும் 
10...25...36...50...100 என 
அவ்வப்போது மாறும் 


1,2,3,4,5,8, 17     35     100 என 
அழகிய தவறோடு எண்ணி முடித்த 
அதி சிறுவனை கூட்டித்திரிந்த கடவுள்
எல்லோரையும் கண்டுபிடித்தார் 

...... பின் 
பார்வையற்ற சிறுவனுக்குப் பதிலாக 
எண்ணத் தொடங்கிய கடவுள் 
அவனுடைய இரவை 
எந்த எண்ணில் முடிப்பதென தெரியாமல் 
திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்.

Sunday, 1 April 2018

கவிதை


 வாசனையான மீன்கள்  

விளையாட  போக்கிடமோ உலவிடமோ அற்ற 
அடுக்குமாடி குடியிருப்புகளை  
சில நிறங்களிலேயே ஓவியமாக்கி விடலாம்

மனதுக்குள் ஓவியங்களை நுழையவிடுவதும் 
ஓவியங்களுக்குள் நுழைவதும் ஒன்றுதான் 

சுவர்களெங்கும் ஓவியங்கள் உள்ள வீட்டில்
நிறைய தெருக்கள் உள்ளன 
அது கால்களுக்குப் பதிலாய்  
கண்கள்  நடக்கும்  தெருக்கள்  

சிறுமிகள் பாண்டியாடும் ஓவியத்தில் நுழைந்தவள் 
சிரித்து சிரித்து குதுகலிக்கிறாள்
வண்ணத்துப் பூச்சியின் மஞ்சளைப் பூசிக்கொள்கிறாள்
விரல்கள் கதைபழகும் 
மடிநிறைய கூழாங்கற்கள் 

சிறுவர்கள் ஊஞ்சலாடும் ஓவியத்தில் குதிப்பவன் 
ஒவ்வொரு விழுதாக ஆடுகிறான்
ஆலம் பழ முச்சுவையில் ஆழ்கிறான் 
பறவைகளின் சினேகம் கூடிய
கை நிறைய அழகிய இறகுகள் 

நீராடும் குளம் ஒன்றில் இறங்கும் அம்மா
தாமரையை உச்சி முகர்கிறாள்
மெல்லிய ஆடை சரியச் சரிய 
நீராக மாறும் சாபம் பெறுகிறாள்
அவள் உடலைக் கடக்கும் மீன்கள்
Remy பர்ப்யூம்  வாசனையானவை 

கடந்த காலம் மீட்பதில் சாயல்கள் அலாதியானவை 
தந்தை சாயலில் உழவு மாடுகளோடு உள்ள 
ஓவியத்தில் நுழையும் அப்பா 
மேழியைப் பிடித்தபடி ஏர்க்குச்சியை வாங்குகிறார் 
காற்றில் பறந்த புழுதி மண்ணுக்கு
ஏழாவது சுவை 

வரவேற்பு மேசையில் வைத்த
இனிப்புகளையும் பலகாரங்களையும் ஓவியத்திற்குள்ளேயும் பரிமாறுகிறார்கள் 

ஓவியத்திலிருந்தவர்கள் தெரு முனை வரை வந்து 
வழியனுப்புகிறார்கள் 
அவர்கள் சென்ற பின்பு 
ஓவியங்கள் முன்னிலும் அழகாக இருப்பதை 
நீங்கள் உட்பட எல்லோரும் உணரத்தொடங்கினர் .