கவிதை
வாசனையான மீன்கள்
விளையாட போக்கிடமோ உலவிடமோ அற்ற
அடுக்குமாடி குடியிருப்புகளை
சில நிறங்களிலேயே ஓவியமாக்கி விடலாம்
மனதுக்குள் ஓவியங்களை நுழையவிடுவதும்
ஓவியங்களுக்குள் நுழைவதும் ஒன்றுதான்
சுவர்களெங்கும் ஓவியங்கள் உள்ள வீட்டில்
நிறைய தெருக்கள் உள்ளன
அது கால்களுக்குப் பதிலாய்
கண்கள் நடக்கும் தெருக்கள்
சிறுமிகள் பாண்டியாடும் ஓவியத்தில் நுழைந்தவள்
சிரித்து சிரித்து குதுகலிக்கிறாள்
வண்ணத்துப் பூச்சியின் மஞ்சளைப் பூசிக்கொள்கிறாள்
விரல்கள் கதைபழகும்
மடிநிறைய கூழாங்கற்கள்
சிறுவர்கள் ஊஞ்சலாடும் ஓவியத்தில் குதிப்பவன்
ஒவ்வொரு விழுதாக ஆடுகிறான்
ஆலம் பழ முச்சுவையில் ஆழ்கிறான்
பறவைகளின் சினேகம் கூடிய
கை நிறைய அழகிய இறகுகள்
நீராடும் குளம் ஒன்றில் இறங்கும் அம்மா
தாமரையை உச்சி முகர்கிறாள்
மெல்லிய ஆடை சரியச் சரிய
நீராக மாறும் சாபம் பெறுகிறாள்
அவள் உடலைக் கடக்கும் மீன்கள்
Remy பர்ப்யூம் வாசனையானவை
கடந்த காலம் மீட்பதில் சாயல்கள் அலாதியானவை
தந்தை சாயலில் உழவு மாடுகளோடு உள்ள
ஓவியத்தில் நுழையும் அப்பா
மேழியைப் பிடித்தபடி ஏர்க்குச்சியை வாங்குகிறார்
காற்றில் பறந்த புழுதி மண்ணுக்கு
ஏழாவது சுவை
வரவேற்பு மேசையில் வைத்த
இனிப்புகளையும் பலகாரங்களையும் ஓவியத்திற்குள்ளேயும் பரிமாறுகிறார்கள்
ஓவியத்திலிருந்தவர்கள் தெரு முனை வரை வந்து
வழியனுப்புகிறார்கள்
அவர்கள் சென்ற பின்பு
ஓவியங்கள் முன்னிலும் அழகாக இருப்பதை
நீங்கள் உட்பட எல்லோரும் உணரத்தொடங்கினர் .
posted by பூவிதழ் @ April 01, 2018
0 Comments



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home