கவிதை
கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள்
பகலில் இருந்தபடியே
இரவை உருவாக்குகிறார்கள்
நீரிலிருந்தபடியே நெருப்பை உருவாக்குவது போல
சில நேரங்களில்
நைந்த கைக்குட்டை கிழிசல்கள்
விண்மீன்களை உருவாக்கும்
இரவின் நீளம்
ஓர் எண்ணில் முடியும்
10...25...36...50...100 என
அவ்வப்போது மாறும்
1,2,3,4,5,8, 17 35 100 என
அழகிய தவறோடு எண்ணி முடித்த
அதி சிறுவனை கூட்டித்திரிந்த கடவுள்
எல்லோரையும் கண்டுபிடித்தார்
...... பின்
பார்வையற்ற சிறுவனுக்குப் பதிலாக
எண்ணத் தொடங்கிய கடவுள்
அவனுடைய இரவை
எந்த எண்ணில் முடிப்பதென தெரியாமல்
திருதிருவென முழித்துக் கொண்டிருக்கிறார்.


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home