Tuesday, 22 May 2018

மாய நிலம் _ 3



   மாய நிலம் -3 

மரப்பெண் 

   சிறிது தூரம் நடந்து சென்றதும் பிரசவ வலி அதிகமானது. எது எந்த திசை என எதுவும் அவளுக்குப் புரியவில்லை. அவளுக்கு நேர் எதிர் திசையில் முன்பு அவளும் அவள் கனவனும் உருவாக்கிய குடில் தெரிந்தது. அதை அடைந்து தட்டுத்தடுமாறி உள்ளே சென்றாள்.  பொழுது சாய்ந்து சூரியன் மறைந்து விட்டது.

   சற்று நேரத்தில் வீரிட்டுக் கத்தியபடி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். நீண்ட நேரமாக மயக்கத்தில் இருந்தாள்.  அவளின் வீறிட்ட சத்தம் கேட்ட மேகம் ஒரு மின்னலை அனுப்பி நடந்ததைப் பார்த்து வருமாறு அனுப்பியது. 

  மயங்கிக் கிடந்த தாயையும் இருட்டில் அழுதுகொண்டு இருந்த குழந்தையையும் பார்த்து மின்னல் கலங்கிப் போனது. 

  தன் வெளிச்சமான விரல்களால் குழந்தையை மெல்ல தொட்டுப் பார்த்தது. மின்னலின் ஒளி குழந்தையின் உடலில் ஊடுருவியது. மாய ஆற்றலை குழந்தை பெற்றது.

  மின்னல் அவ்வப்போது வந்து,  இரவுகளில்  தனியே குழந்தையைப் பார்த்தது. ஒரு நாள் திடீரென குழந்தையின் அம்மா விழித்து விட்டாள். மின்னல் தனது கதையைச் சொன்னது. 

   மின்னல் வானத்தில் நீண்ட நேரம் ஒளியாக இருக்கப் பிறந்ததாகக் கூறியது. அப்படி வானத்தில் ஒளிர்ந்து கிடந்த ஒரு நாள் பூமி எங்கும் நனையும் அளவுக்கு மழை பெய்தது. எல்லா பொருள்களும்  ஈரம் ததும்ப இருந்தன. சமைக்க எங்குமே விறகு கிடைக்கவில்லை.  ஒரு பெண் விறகு என நினைத்து என்னை ஒடித்தாள் கோவப்பட்ட நான் அவள் உயிர் போக  காரணமாகி விட்டேன்.


  அவள் இறக்கும் முன் அவள் கதையைச் சொன்னாள். 

  உலகம் தோன்றிய புதிதில் மனிதர்களைப் போலவே மரங்களும் குழந்தைகளைப் பெற்றெடுத்தன. காலப்போக்கில் மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக இப்போது போலவே மரங்களை வெட்டத் தொடங்கியதும் குழந்தைகளைப் பெற்றுத் தரும் மரங்களே பூமியில் இல்லாமல் போனது.


 அப்படிப்பட்ட ஒரு மரத்துக்குப் பிறந்த கடைசி குழந்தை நான் தான். அப்படித் தான் நான்  வளர்ந்தேன் . ஒரு நாள் என் தாய் மரத்தை யாரோ நான்கு பேர் சேர்ந்து வெட்டி சாய்த்தனர். 

   என் கண் எதிரே சாய்ந்து வீழ்ந்து கிடந்த என் அம்மாவைப் பார்த்து கதறி அழுதேன். திடீரென காட்டில் அழுகை சத்தம் கேட்டு திரும்பி பார்த்த அந்த நான்கு பேரும் என் அருகில் வந்து நடந்ததை அறிந்து கொண்டனர். 

   பிறகு, நால்வரும் ஒரே குரலில்  என்னிடம் " இனிமேல் நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் எங்களுக்கு நீ தான் தங்கை " எனக் கூறி உறுதி அளித்து என்னை அவர்களுடனே அழைத்துச் சென்றனர். ஒவ்வொரு நாளும் என்னைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.


   அவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த போது நாள், மாதம், வருடம் போவதே தெரியாமல் வளர்ந்து பெரியவளானேன்.

  எனக்குத் திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. எந்த  மருந்து சாப்பிட்டும் பல மருத்துவர்கள் பார்த்தும் என் உடல் குணமாகவே இல்லை. நான் ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிட  முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டேன். நான்கு அண்ணன்களும் என்னைச் சுற்றி கவலையோடு அமர்ந்து இருந்தனர். திறந்த வீட்டில் இப்படி அமைதி நிலவ நான்கு பேர் அமர்ந்து இருப்பதைப் பார்த்த தெருவில் மோர் விற்கும் கிழவி ஒருத்தி வீட்டிற்குள்ளே வந்தாள். என் நெற்றி தடவி நாடி பிடித்துப் பார்த்து ஒரு வைத்தியம் சொன்னாள். 


    மோர் விற்கும்  கிழவியை வீட்டிற்கே வந்த தெய்வம் போல் பார்த்தனர். அவள் சொன்னதை கவனமாகக் கேட்டனர். 

   கிழக்கே நூறு மைல் தூரத்திற்கு அப்பால் சூரியன் புறப்படும் இடத்தில் ஒரு குளம் இருக்கிறது அந்தக் குளத்தில் ஒற்றை தாமரை பூக்கும் நாளில் குளத்தின் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தால் இவள் உடம்பு குணமாகி விடுவாள். 

  செல்லும் போது இவளுடைய ஏதாவது ஒரு ஆடையை எடுத்துச் சென்று குளத்தில் நனைத்து எடுத்து வர வேண்டும் அதை உடுத்தி குளத்து தண்ணீரைப் பருகினால் பழைய உடலையும் நலத்தையும் பெற்று விடுவாள். 

   வரும்  வழியில் எத்தனையோ சத்தங்களும் குரல்களும் கேட்கும் அதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் பார்ப்பவர்கள் பேசும் தன்மையை இழந்து விடுவார்கள் என்று கிழவி கூறி முடித்தாள். 

  கிழவி கூறியதைக் கேட்ட நால்வரும் கண்களில் கண்ணீர் பெருக தங்கையிடம் விடை பெற்றனர்.  கிழக்குத் திசை நோக்கி புறப்பட்டனர். 
   நாள்கள் பற்றிய கணக்கு ஏதுமின்றி பயணித்தனர். பூமி எங்கும் மஞ்சள் வெயில் படர்ந்திருந்த நீண்ட பகல் இருந்த ஒரு நாளில் குளத்தை அடைந்தனர். குளம் எங்கும் தாமரைப் பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்து இத்தனை பூக்கள் இருக்கும் குளம் எப்போது ஒற்றைத் தாமரையைப் பூக்கும் என எண்ணி மனம் ஒடிந்து போனார்கள். 

   ஆளுக்கு ஒரு கரையில் தவம் இருப்பது போல இரவு பகல் பாராமல் காத்திருந்தனர். அவர்களின் கண்களுக்கு சுற்றி நடந்த எந்த காட்சிகளும் தெரியவில்லை. காதுகளுக்கு சுற்றி நடக்கும் எந்த ஒலியும் கேட்கவில்லை. இப்படியே நாள்கள்  குளம் நிறைய தாமரை பூக்கவே கடந்தன. 

   சூரியன் சரியாக கிழக்கில் உதித்த ஒரு நாளில் குளத்தில் ஒற்றைத் தாமரை பூத்தது. நான்கு பேரும் உயிர் வந்தது போல் மகிழ்ந்தனர். 

    தாமரையைப் பறிக்க குளத்தின் உள்ளே இறங்க சென்ற போது , அங்கு கரையில் அமர்ந்திருந்த தவளை ஒன்று அவர்களைத் தடுத்தது. 

  இந்தக் குளம் எனக்குச் சொந்தமானது. என்னைக் கேட்காமல் உள்ளே யாரும் போகக் கூடாது எனத் தடுத்து நிறுத்தியது.

மாய நிலம் - 2'

அதிசய மரம்


  அதிசய மரம் இரண்டு இலைகளை மட்டும் உடையது . ஒரு இலையில் மரத்தின் உயிரும் மற்றொரு இலையில் தானமாகத் தருவதற்கு ஒரு உயிரும் உள்ளது. அந்த மரத்திடம்  சென்று பாட்டிக்குத் தேவையான உயிரை மீட்டு வருவதாகக் கூறி ,  மேகங்கள் புறப்பட்டன.

   பெருமழையில் நனைந்த நான் (குயில் ) குளிரில் நடுங்கி துடித்துக் கொண்டு இருந்தேன் காகங்கள் மேகங்கள் என யாருமே என்னைக் கவனிக்கவில்லை. 


   மேகங்கள் மிக வேகமாகச் சென்றன. காடு மலை என நெடுந்தூரம் கடந்து சென்றன. வழியில் வறண்டு போன நிலப்பகுதி ஒன்றைக் கடக்க மனமின்றி மழைப் பொழிந்து சென்றன. இறுதியில் அந்த அதிசய மரத்தைக் கண்டு பிடித்தன. அந்த அதிசய மரத்தைச் சுற்றி நான்கு   பெரிய பாறைகள் இருந்தன. 

   ஒரு பாறை சிவப்பு நிறத்தில் இருந்தது. அந்த பாறை மீது நின்றால் உலகம் சமதளமாக பார்க்க அழகாக தோன்றும் அதற்கு எதிரே காவி நிறத்தில் ஒரு பாறை இருந்தது அது கரடு முரடாக இருந்தது. அதன் மீது ஏறினால் உலகம் மேடு பள்ளமாகத் தெரியும் பச்சை நிற பாறை கோணலாக இருந்தது. அதன் அருகில் செல்லாத வகையில் சுற்றிலும் முட்புதர்கள் இருந்தன. எதிரே நீல நிற பாறை இந்தது அது சிவப்பு பாறையோடு இணைந்து இருப்பது போல இருந்தது. 

   மரத்திடம் ஒரு உயிரைத் தானமாகப் பெற வருகிற யாராவது தவறான பாறை மீது ஏறினால் மரத்திடம் பேசும் சக்தியை இழந்து விடுவார்கள்  அதனால் எப்போதும் காவி நிற பச்சை நிற பாறைகள் மீது யாருமே ஏற மாட்டார்கள் . 


   மேகங்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை ஆனால் மேக கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி மேகம் நீலப் பாறையைப் பார்த்ததும்  தாய் மடியில் அமர்வது போல வேகமாகச் சென்று அமர்ந்தது அதனால் மேகங்கள் எல்லாமே நீலப் பாறை மீது அமர்ந்தன. இடம் இல்லாத மேகங்கள் சிவப்புப் பாறை மீது அமர்ந்தன. ஆனால் அங்கு ஒரு எறும்பு அமர்ந்து இருந்தது. 

    மேகங்கள் மரத்திடம் நடந்ததைக் கூறின . மரம் எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டு பதில் ஏதும் சொல்லாமல் இருந்தது. மரம் எறும்பையும் மேகங்களையும் மாறி மாறி பார்த்தது. எறும்பின் கதையைக் கூறத் தொடங்கியது. 


   எறும்புகள் உலகம் உருவான நாளில்  ஒரு காட்டுப்பன்றி அளவில்  இருந்தன . நமது கதை நிகழும் காலத்தில் தான் உருவத்தில் சிறியதாக உருமாற்றம் அடைந்தது. இன்றும் சில பெரிய எறும்புகள் காட்டுப்பன்றி போல ஆள் அரவம் நுழையாத காடுகளில் இருப்பதாக நம்புகிறார்கள். 


  எறும்புகள் பூமியில் பெரிய துளையிட்டு பெரிய எறும்பு புற்றுகளில் வாழ்ந்தன. கிடைக்கும் தானியங்களையும் தம் வளை போன்ற புற்றுகளில் விழும் விலங்குகளையும் உண்டு வாழ்ந்தன.  

    ஒரு நாள் அந்த வழியே யானைக் கூட்டம் ஒன்று வந்தது. அதில் பல யானை குட்டிகளும் (கன்று) இருந்தன. ஒரு குறும்புக்கார யானைக் குட்டி தாறுமாறாக வந்து எறும்பு புற்றினுள் விழுந்துவிட்டது. எறும்பு புற்றில் மூச்சு முட்டியது  கால்கள் எல்லாம் மடங்கி கொண்டன சிறிது நேரத்தில் யானைக் கன்று (குட்டி) செத்துப் போனது. இதனை அறிந்த யானைக் கூட்டம் கோபத்தில் எறும்பு புற்றை மிதித்து அழித்தது. வெளியே வந்த பல எறும்புகளை மிதித்து கொன்றன. இதைச் சற்றும் எதிர்பாராத எறும்புகள் அதிர்ச்சியில் உறைந்து போய் பயத்தில் நடுங்கி மிகச் சிறியதாக மாறின. 

   ஆனாலும் யானைகளின் கோபம் தீரவில்லை. யானைக் (குட்டிக்கு) கன்றுக்கு உயிர் கொடுத்து விட்டால்  யானைகளின் கோபத்தில் இருந்து எறும்பு இனத்தையே காப்பாற்றலாம் மேலும் பயத்தில் சிறியதாகிப் போன எறும்புகளின் பழைய உருவத்தைப் பெறலாம் என்று வந்து , சிவப்புப் பாறை மீது இருக்கும் எறும்பின் கதையை மரம் கூறியது. 


   இந்தக் கதையைக் கேட்ட மேகங்களில் பெரிய மேகம் ஒன்று எறும்பிடம் பேசுவதற்கு அருகில் நெருங்கி சென்றது ஆனால் எறும்பு முகத்தைத் திருப்பிக் கொண்டது. 

   மேகம் தன் முயற்சியில் பின் வங்க தயாராக இல்லை . எப்படியாவது பாட்டியின் உயிரை மீட்க வேண்டும் - சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என உறுதியாக இந்தது. 

   நீண்ட அமைதிக்குப் பின் எறும்பு பேசியது. 

" மேகங்கள் தான் எங்கள் இனத்தை அதிகம் அழிக்கின்றன . புற்றுகளில் பாயும் மழை வெள்ளத்தால் எண்ணிக்கை இல்லாமல் எறும்புகள் அழிகின்றன. எங்களின் பல மடங்கு உழைப்பு அழிகிறது. புற்றுகள் தான் முதலில் நிரம்புகிறது. இப்படி பட்ட உங்களுக்கு எப்படி நான் உதவ முடியும் ? " என எறும்பு வருத்தப்பட்டு கூறியது. 

  மேகம் , எறும்பின் பேச்சில் இருந்த வலியையும் வருத்தத்தையும் நியாயத்தையும்  ஏற்றுக் கொண்டது.


    மரத்தின் இலையில் இருக்கும் உயிரைத் தந்தால் ,  அதற்கு பதிலாக மழை பெய்வதற்கு முன்பாகவே மழை வருவது பற்றி அறியும் ஆற்றலைத் தருவதாகக் கூறின. இதைக் கேட்ட எறும்பு இல்லையில் உள்ள உயிரைத் தருவதாக ஒப்புக் கொண்டது. ஆனால் தங்கள் பழைய உருவத்தை எப்படி பெறுவது எனக் கேட்டது. 

   பூமியில் எந்த உயிரியும் அதன் உருவத்தை விட அதிக வலிமையாக இல்லை இப்போது நீங்கள் உங்கள் உருவத்தை விட வலிமையாக உள்ளதால் உருவத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம் என்றது மேகம். 

    இதைக் கேட்ட எறும்பு யோசித்தது. மரமும் இதையே வலியுறுத்தியது. இறுதியில் எறும்பு ஒத்துக் கொண்டது. உருவை விட திரு உயர்ந்ததாய் எறும்பு திரும்பி சென்றது. 

   மரத்தின் இலையைப் பெற்றுக் கொண்டு  மேகங்கள் விரைந்து சென்றன. போன வேகத்திலேயே கிழவியின் மீது இலையைப் போர்த்தின . காம்புப் பகுதி கழுத்திலும் இலையின் முழுப்பகுதி மார்பிலும் இருக்கும் படியாக பார்த்துக் கொண்டன.

  கிழவியின் இமைகள் மெல்ல அசைந்தது. உயிர் பெற்று எழுந்தாள். காகங்கள் மேகங்கள் எல்லாமே மகிழ்ச்சி அடைந்தன ஆனால் மழையில் நனைந்து நடுங்கி துடித்துக் கொண்டு இருந்த குயிலை மறந்து விட்டன. திடீரென்று குயிலின்  நிலையைப் பார்த்து பதறிப் போன மேகங்கள் வருந்தின . 

  மரத்தில் அமர்ந்து இருந்த காகங்களை அழைத்து சுள்ளிகளைச் சேர்த்துத் தீ மூட்டினான் கிழவன் கதகதப்பில் குயில் மெல்ல கண் விழித்தது.

  அருகில் சென்ற மேகங்கள் தங்களை மன்னிக்கும்படி கேட்டன. இனி எப்போதும் மழையில் நனையாத வரம் ஒன்றைக் கொடுப்பதாகவும் அதை யாரிடமாவது சொன்னால் அது கேட்பவரிடம் சென்று விடும் எனக் கூறி சென்றன. 

   இதன் பிறகு குயில் இருக்கும் இடத்தைச் சுற்றி மட்டும் மழைப் பெய்யாமல் இருக்கும் அதனால் தான் நாம் இருக்கும்  இடத்தில் ஒரு துளி மழையும் விழவில்லை எனக் கூறியது குயில். பிறகு அவள் காதில் அந்த வரத்தைக் சொல்லி  பறந்தது. 

   வானம் அப்போது தூறல் போட்டபடி இருந்தது. அவள் நடந்த போதும் அவள் மீது ஒரு துளியும் விழவில்லை.  சிறிது தூரத்திலேயே பிரசவ வலி அதிகமானது. 





மாய நிலம் - 1


மாய நிலம் – 1 


மேகவெடிப்பு . 
      அடைமழை ஓய்ந்தது . அங்கு
கர்பினியான அவளைத் தவிர யாரும் இல்லை. ஆதரவாக இருந்த அவள் கனவனும் இரண்டு நாள்களுக்கு முன்பு மேக வெடிப்பில் இறந்து போனான். 
     மேக வெடிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரை மணி நேரத்தில் 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை குடத்தில் இருந்து தண்ணீரை கொட்டுவது போல பேய் மழை கொட்டுவது ஆகும். 

    அழுது வற்றிப் போன கண்களுடன் மரத்தின் அடியில் மழைக்கு ஒதுங்கி இருந்தாள் . ஆனால் அவளின் விம்மல் நிற்கவில்லை.
மழை ஓய்ந்த நிசப்தம் எங்கும் பரவி இருந்தது . மரத்தின் அடியில் ஒரு துளி மழையும் விழவில்லை ஆனால் இலைத் துளிகள் கூட இல்லையே ? அது அவளுக்கு வியப்பாக இருந்தது. 


    அவளுடைய விம்மலை நெடுநேரமாய் கவனித்த மரம் அவளிடம் பேச்சுக் கொடுத்தது . அவளின் துயர கதையைக் கேட்ட மரம் பரிதாபப்பட்டு வருந்தியது . மரத்தில் அமர்ந்து இருந்த ஒரு குயிலும் எல்லாவற்றையும் கேடடுக்கொண்டு இருந்தது. 


  குயில் கீழே இறங்கி வந்து அவளோடு பேசியது . "இந்த மழை நாளில் இனி எங்கு எப்படி போகவதென்று தெரியவில்லையே"  என சொல்லி அழ ஆரம்பித்தாள் .

" கவலைப்படாதே , எவ்வளவு மழை பெய்தாலும் நீ நனையாமல் இருக்க நான் உதவுகிறேன் " என்றது குயில். 

   குயிலை அமைதியாகப் பார்த்தாள் . அவள் பார்வையைப் புரிந்து கொண்ட குயில் தன் கதையைச் சொல்லத் தொடங்கியது.

    நான் பிறந்த சில நாளிலேயே என்னை அடைகாத்த காகம் என்னை வேறு பறவை என அடையாளம் கண்டுவிட்டது . தத்திப் பறந்ததும் என்னைக் கொத்த துடித்தது . அதனிடம் இருந்து தப்பிக்க நான் எவ்வளவோ போராடினேன் . என் இளம் சிறகில் இருந்த முழு வலிமையையும் கூட்டிப் பறந்து பார்த்தேன் என்னால் முடியாத சூழலில் ஒரு பாட்டி சுமந்து சென்ற விறகு கட்டில் மயங்கி விழுந்தேன். 


  பாட்டியும் நான் இருந்தது தெரியாமல் என்னை வீட்டிற்கு சுமந்து சென்றாள். அடைகாத்த காகத்தோடு இன்னும் பல காகங்கள் சேர்ந்து பின் தொடர்ந்து வந்தன. 


   வீடு வந்ததும் விறகுகட்டை கீழே போட்டாள். விறகு  குத்தி  அலறி மீண்டும் மயங்கினேன். என் அலறல் குரல் கேட்டு ஓடி வந்த பாட்டியின் கணவர், மேலே பறந்த காகங்களைப் பார்த்து விறகின் அடியில் நான் செத்து கிடப்பதாக பதறிப் போய் , விறகைப் போட்டு என்னைக் கொன்றதாக பாட்டியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் . வயதான பாட்டி கீழே விழுந்து செத்துப் போனாள் . 


  அழுதபடியே பாட்டியோடு என்னையும் சேர்த்து எரிக்க விறகோடு  தீ வைத்தார். சூடு தாங்காமல் அலறி பறந்தேன் நான்.


   பறவை இறந்ததாக தப்பாக நினைத்து பாட்டியைக் கொன்று விட்டதாக அழுது புரண்டார் . எப்படியாவது பாட்டியைக் உயிர்ப்பிக்க முடியாதா என மேலே பறந்து கொண்டிருந்த காகங்களிடம் கேட்டார்.


  காகங்கள் எல்லாம் சேர்ந்து தாத்தாவை நெருப்புக்கு மேலே 
தூக்கி தாத்தாவின் கண்ணீரால் நெருப்பை அனைக்க முயன்றன. 

   அந்த வழியே மேலே சென்ற மேகங்கள் கீழே இறங்கி வந்து நடந்ததைக் கேட்டன. கிழவனுக்காக தாங்களும் உதவுவதாக பெருமழை பொழிந்தன. நெருப்பு அனைந்தது. கிழவனை கீழே இறக்கி விட்டன . 

 பாட்டியின் உயிரை மீட்க முடியாத கிழவன் அழுது கொண்டே இருந்தான் . கிழவனுக்காக மேகங்களும் வருந்தின. 

  வயதான மேகம் ஒன்று கிழவன் அருகே வந்தது வரும் வழியில் ஒரு அதிசய மரத்தைப் பார்த்ததாக கூறியது.